(இக்கவிதை சிவகாசி பட்டாசு
தொழிற்சாலையில் பணியாற்றும்
ஒரு சிறுவன் நமக்கெல்லாம்
தீபாவளி வாழ்த்து மடல் எழுதுவதா பாவித்து எழுதப்பட்டது)
சிவகாசி அன்புள்ள நண்பர்களே,
பொட்டாசியம் கலந்து
பட்டாசு செயய்யும் போது பெற்றெடுத்தாள்,
தாய் என்னை பட்டாசு தொழிற்சாலையில்..
என், பத்தாம் அகவையில் பட்டாசுக்கு
இறையானாள் பாசத்தாயவள்..
பிறகு பள்ளிக்கே சென்றதில்லை,
பட்டாசு மீது பற்றுக்கொண்டல்ல
வறுமை என்னைப் பற்றிக்கொண்டதால்..
பாடசாலை செல்ல ஆசைத்தான்
எனக்கு பட்டாசு தொழிற்சாலையில்
மாட்டிக்கொண்டேன் அனாதையானதுக்கு.
இங்கு, இரு வேளை சோறுதான் எனக்கு,
இருபது மணிநேர வேலை அதை உண்டதற்க்கு!
கோலி விளையாட வேண்டிய என் விரல்களோ!
அணுகுண்டு செய்து அசந்துவிட்டன.
லெக்சுமி தாயை தொழ வேண்டிய என் கரங்களோ!
லெக்சுமி வெடி செய்து தொழுகின்றது,..
கால்பந்த்தாட வேண்டிய என் கால்களோ
கலசம் செய்ய சேற்றை மிதித்து சோர்ந்துவிட்டன.
எழுதுகோல் பிடிக்க வேண்டிய என் கரங்களைப் பார்த்து,
எள்ளி நகைக்கின்றன மத்தாப்புக்கம்பிகள்!
எல்லோருக்கும் வருடத்தில் ஒருநாள் தீபாவளி,
எனக்கோ இங்கு தினம் தினம் தீயால் வலி!
பணத்தை கரியாக்கும் பட்டாசு
வெடித்து பாரை மாசுறச் செய்யும் தீபாவளி
என பெயரளவில் தீபாவளி கொண்டாடும்
என் நண்பர்களே!
என்னனைப் போன்றோர் வாழ்வில்
கல்வி ஒளி ஏற்றி உன்னத தீபாவளி
கொண்டாடிட உங்களுக்கு வாழ்த்துக்கள்,…..!!!
Comments
Post a Comment