நண்பர்களுக்கு வணக்கம்.
கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக
சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம்
பார்க்க நேர்ந்தது.
படத்தின் கருத்து என்னைக் கொஞ்சம் புருவம் உயர்த்தி
பார்க்க வைத்தது.
வழக்கமான படம் போல் இல்லாமல்
மாறுபட்டதாய் இருந்தது.
ப்டத்தின் கதையைச் சொல்லி விமர்சனம் செய்வதற்காக
இல்லை இந்த பதிவு,
நல்ல கருத்துக்களைச் சொன்னால்
ஓடாத படங்கள் வரிசையில் இந்த படமும் இடம் பிடுத்து விட்டதோ
என்ற ஆதங்கத்தில் படத்தின் கருத்தைப் பகிர்கிறேன்.
நல்ல படமா? இல்லையா?
என்பதை நீங்களே சொல்லுங்கள்..
சிலையும் நீயே சிற்பியும் நீயே உன்னை நீ சரி செய்து கொள் உலகம் தானாக சரியாகி விடும்
எனும் வாசகத்தோடு படம் ஆரம்பமாகிறது.
நீங்க சொல்லிக் கொடுத்த அன்புடைமை , அறிவுடைமை, இன்னா செய்யாமை, வாய்மை, தீவினை,அச்சம் இது எல்லாமே வேலைக்கு ஆகல சார்னு கதாநாயகன் நாசரிட்ம் கேட்கும் போது படிச்சதையெல்லாம் வாழ்க்கையில பயன்படுத்தி பார்க்கலாமா? என்று கூறும் போது அப்படினா 17 வருடம் படிச்சதும் எல்லாம் வீணா? அப்பறம் ஏன் சார் இதைக் கற்றுக் கொடுக்கலனு அப்பாவியாய் கதாநாயகன் கேட்கும் போது நமது கல்விமுறைக்கு சாட்டையடியாகத் தான் எனக்கு பட்டது. வாழ்க்கைங்கிறது வேற, அதுக்கு நிறைய நெகிழ்ந்து கொடுத்து போகனும் சிரிக்கிற இடத்துல சிரிக்கனும், கொடுக்குற இடத்துல கொடுக்கனும்னு சொல்வார் அப்போது
ஜெயம்ரவி விபச்சாரம் பண்ணச் சொல்றீங்களா சார்னு கண்ணீர் விடும் காட்சியில் இது வேற படம் என்று நிமிர்ந்து உட்கார வைத்தது.
ஓட்டுநர் உரிமம் இல்லாமலே காசு கொடுத்துட்டு நகர்ந்து போகும் போது கதாநாயகன் மட்டும் எல்லா பேப்பரும் சரியாக இருக்குதுனு சொல்லியும் ஓரமா நிக்கச் சொல்றது அன்றாடம் அரங்கேறும் எதார்த்தத்தை நினைவு படுத்தியது. பேச மாட்டியாலே என்பதற்கு லஞ்சம் கொடுக்க மாட்டியாங்கிறது குறிப்புச் சொல்னு எனக்கும் அன்றைக்கு தான் தெரிஞ்சது.
ஏட்டு தம்பி ராமையா காவல் நிலையத்திலேயே இந்தாப்பா உன் பொருளையெல்லாம் எடுத்துக்க எவனாவது கை வச்சுட போறாங்கேனு! சொல்லும் போதும்
அதே காவல் நிலையத்தில் அவரது இரண்டு சக்கர வாகனத்தை ஒரு நாள் பிடித்து வைத்து திரும்பக் கொடுக்கும் போது இஞ்சினைக் காணவில்லை என்று சொல்லும் போது 1 நாளுல வந்ததால இஞ்சின் மட்டும் போனது ஒரு மாதம் கழித்து வந்திருந்தால் டயர் கூட மிஞ்சியிருக்காது என்று சொல்லி அங்கே இருக்கிற வண்டிகளைப் பார்த்து காமெடி நடிகர் சூரி எலும்புக் கூடா எத்தனை வண்டிகள், மாட்டினா வண்டியை எடுக்க முடியாது சட்டம் அவ்ளோ ஸ்ட்ராங், ஆனா வண்டிக்குள்ள இருக்கிறது எல்லாம் எடுத்துக்கலாம் சட்டம் கண்டுக்காது, இங்க இருக்கிறது எல்லாம் எவனோ ஒருத்தனோட கனவு தானேய்யா!னு சொல்லும் போதும் அதை நாம ஒப்புக்கொள்ளும் வண்ணம் தானே இன்றைய நிலை உள்ளது..
இந்த நாட்டை ஆளுறவங்க அரசியல்வாதிகள் இல்லை அரசு அதிகாரங்க தான் உண்மையில் இவங்களுக்கு தான் அதிக பொறுப்பு இருக்கனும் என்று சொல்லும் போதும், படிப்பறிவு, பொது அறிவு ஏன் முன் அனுபவம் கூட இல்லாத ஒருத்தனுக்கு ஓட்டு போட்டு எம்.பி, எம்.எல்.ஏ ஆக்கிடுறோம் என்று நமது உண்மை நிலையை உரக்க சொல்லும் போதும்
ஜனநாயகம் உலக நாடுகள் இந்தியா மீது வைத்திருக்கும் மதிப்பீட்டின் அடையாளம். ஆனால் இந்த ஜனநாயக நாட்டில் பணம் இருந்தால் எதுவானும் சட்டப்படி செய்யலாம் என்று மலிந்து கிடக்கும் லஞ்சம், ஊழல் பற்றி சொல்லும் போதும்
பரபரப்பா ஒன்னு சொல்வாங்க, நாளைக்கு இதை விட பரபரப்பா ஒன்னு சொல்லி இதை மறைச்சுடுவாங்க ஆனால் நம்மள மட்டும், பதட்டமாவே வச்சிருப்பாங்க என்று இன்றைய மீடியாக்கள் பற்றி ஒரு சாமானியன் எள்ளி நகையாடும் போதும்
அவன் தப்பு, இவன் தப்புனு சொல்லிக்கிட்டே நாம பண்ணுற தப்பை ஞாயப்படுத்திக்கிட்டு இருக்கோம் சுய ஊழல்வாதியா ஆகிட்டு இருக்கோம் என்று சொல்லும் போது ஒரு சிறு குத்தல் இதயக்கூட்டைத் தாக்கிய போதும் இந்த படம் நிமிர்ந்து நிற்கிறது.
அரசாங்கம் நிர்ணயம் பண்றது ஒரு கட்டணம் வசூலிக்கிறது கூடுதல் கட்டணம் கல்விக் கட்டணத்துக்கு பணம் இருந்தது கூடுதல் கட்டணத்திற்கு பணம் இல்லை அதுக்காக ஒருமுறை மட்டும் லஞ்சம் வாங்கினேன் என்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளும் கதாபாத்திரம் நல்லவனை கை நீட்ட வைத்த இந்த சமூகத்தைப் பற்றி சிந்திக்க வைக்கிறது.
நம்முடைய சோம்பேறித்தனம், அதிபுத்திசாலித்தனம், சுயநலம் இவைகள் தான் ஊழலின் ஆரம்பம். அரசு அலுவலங்களுக்கு கடைசியாய் போய் குறுக்கு வழியில் காசு கொடுத்து காரியம் சாதிக்க ஆள் தேடுவது, ரயில் டிக்கெட்க்கு ஏஜெண்ட் தேடுவது, காவல்நிலையத்திற்கு செல்ல வார்டு, வட்டம், மாவட்டம் என ஆள் தேடுவது இந்த தேடல் தான் ஊழல் என்று அழுத்தமாக இந்தப் படம் சொல்லிச் செல்லும் கருத்து என்னை வெகுவாக கவர்ந்தது. உங்களுக்கும் பிடிக்கும் எனும் நம்பிக்கையில் பகிர்ந்துள்ளேன்.
நன்றி: பாண்டியன்
Comments
Post a Comment